Krishna Jayanthi 2026: மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஜென்மாஷ்டமி உள்ளிட்ட பெயர்களாலும் இவ்விழா அழைக்கப்படுகிறது.
2026-ல் எப்போது கொண்டாடப்படுகிறது?
2026-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அஷ்டமி திதி அதிகாலை 2.08 மணிக்கு தொடங்கி இரவு 11.46 மணிக்கு நிறைவடைகிறது. ரோகிணி நட்சத்திரம் அதிகாலை 12.57 மணிக்கு தொடங்கி இரவு 11.22 மணி வரை உள்ளது.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் இரவு நேரத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2026-ல் இரவு *9 மணி முதல் 11.15 மணி வரை* வழிபாட்டிற்கு ஏற்ற நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் விரதம் இருந்து, இரவு நேரத்தில் கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம்.
வீடுகளில் கண்ணனை வரவேற்கும் வழக்கம்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிப்பதுடன், குழந்தைகளின் காலடித்தடம் போன்ற வடிவில் கண்ணனின் பாதங்களை வரைந்து வழிபடுவது முக்கியமான வழக்கமாக உள்ளது. சிறுவர்களுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்ப்பதும் பல குடும்பங்களில் நடைபெறுகிறது.
மதுரா, பிருந்தாவனத்தில் கோலாகல கொண்டாட்டம்
கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படும் மதுராவிலும், அவர் வளர்ந்த பிருந்தாவனத்திலும் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், பஜனைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உரியடி போட்டிகள், கிருஷ்ண லீலைகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது?
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. கம்சன் உள்ளிட்ட தீய சக்திகளை வீழ்த்தியதுடன், மனிதர்கள் தர்மத்தின் வழியில் வாழ்வதற்கான பல்வேறு போதனைகளையும் வழங்கினார். குறிப்பாக பகவத்கீதையின் மூலம் தர்மம், கடமை மற்றும் நல்வாழ்வு குறித்து உலகிற்கு வழிகாட்டினார்.
கிருஷ்ணரின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான தகவல்கள் பகவத புராணம், விஷ்ணு புராணம், ஹரிவம்சம், மகாபாரதம் உள்ளிட்ட புராண மற்றும் இதிகாச நூல்களில் இடம்பெற்றுள்ளன.

