TN Assembly : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளும், அதற்கு அமைச்சரும் சபாநாயகரும் அளித்த பதில்களும் அவையில் பரபரப்பை ஏற்படுத்தின.
சபாநாயகருக்கு உதயநிதி பாராட்டு
சட்டப்பேரவை நடவடிக்கைகளை சபாநாயகர் சிறப்பாக வழிநடத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அதே நேரத்தில், ஆளும் தரப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், பின்னர் அவைக்குறிப்பில் இருந்து அந்தப் பேச்சுகள் நீக்கப்படுவதாகவும் அவர் கூறினார். சட்டப்பேரவையில் தற்போது கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் பாடல்களும் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், “நாம் சட்டப்பேரவைக்கு வந்துள்ளோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், முதலமைச்சர் தனது மேஜையில் உள்ள கோப்புகளைத் திறந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட கருத்துகள்கூட சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருவதாக உதயநிதி குறிப்பிட்டார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்
இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கும்போது, அனைத்து துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், தவறுகள் இருந்தால் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே நேரலை ஒளிபரப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த உதயநிதி, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை முதன்முதலில் நேரலையில் ஒளிபரப்பியது திமுக ஆட்சிதான் எனக் குறிப்பிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
ஆதாரமின்றி பேச வேண்டாம்: சபாநாயகர்
தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆதாரம் இல்லாத கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது சட்டப்பேரவை நடைமுறையின் ஒரு பகுதிதான் என்றும் அவர் விளக்கினார். அவையின் கண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது தனது பொறுப்பு என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
அனைத்து உறுப்பினர்களும் ஆதாரங்களுடன் பேசுவதன் மூலம் சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வி
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அமைச்சர்கள் இடையில் எழுந்து பதிலளிப்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கும் போது அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பது அவையின் நடைமுறையில் உள்ளதே என விளக்கம் அளித்தார். இதனால் சட்டப்பேரவையில் தொடர்ந்து விவாதம் நீடித்தது.

