திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களின் வயது மற்றும் பதவிக்காலம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது வரம்பு
புதிய தீர்மானத்தின்படி, திமுக மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு *அதிகபட்ச வயது 70* என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருவர் மாவட்டச் செயலாளர் பதவியில் அதிகபட்சமாக *3 முறை மட்டுமே* தொடர முடியும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் நிலையில், தற்போது 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் தங்களது பதவியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பதவி இழக்க வாய்ப்புள்ள 13 பேர்
தற்போது 70 வயதைக் கடந்த நிலையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்கள்:
திருவண்ணாமலை தெற்கு – எ.வ. வேலு – 75
தூத்துக்குடி தெற்கு – அனிதா ராதாகிருஷ்ணன் – 74
புதுக்கோட்டை தெற்கு – ரகுபதி – 76
விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான் – 71
விருதுநகர் – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – 77
ராணிப்பேட்டை – ஆர். காந்தி – 80
தஞ்சை வடக்கு – சாக்கோட்டை அன்பழகன் – 72
நெல்லை மேற்கு – ஆவுடையப்பன் – 81
ஈரோடு தெற்கு – முத்துசாமி – 77
மதுரை மாநகர் – கோ. தளபதி – 70
காஞ்சிபுரம் தெற்கு – சுந்தர் – 72
தேனி தெற்கு – ராமகிருஷ்ணன் – 77
சேலம் கிழக்கு – எஸ்.ஆர். சிவலிங்கம் – 75
இந்த 13 பேரும் புதிய வயது வரம்பின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம்
கட்சியின் நிர்வாகத்தில் இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்திலேயே வயது மற்றும் பதவிக்கால வரம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட அளவில் மட்டுமின்றி, பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளுக்கும் வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அனைத்து மட்டங்களிலும் உள்கட்சித் தேர்தல் நடத்தப்படும் என கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
77 மாவட்டங்கள் 110 ஆக உயர்வு
திமுகவின் தற்போதைய 77 மாவட்டக் கழகங்களை 110 ஆக அதிகரிக்கவும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்ட அளவில் கட்சிப் பணிகளை மேலும் நெருக்கமாகக் கண்காணிப்பதுடன், புதிய நிர்வாகிகளுக்கு அதிக பொறுப்புகளை வழங்குவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் மேற்கொள்ளப்படும் இந்த அமைப்பு மாற்றங்கள், கட்சியின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது

