தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களை கவுரவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள *‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.* இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1,28,499 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக இரண்டு நகை நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
செப்.15-ல் தொடக்கம்
அண்ணா பிறந்த நாளான *செப்டம்பர் 15-ம் தேதி* இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் நினைவுகூரும் வகையிலும், தாய் மற்றும் குழந்தையை கவுரவிக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
4.41 லட்சம் தங்க மோதிரங்கள்
இத்திட்டத்துக்காக தலா ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள்* வழங்குவதற்கு ஏற்கெனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஜூலை 14-ம் தேதி தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இதில் மொத்தம் 11 நிறுவனங்கள் தமிழ்நாடு டெண்டர்ஸ் போர்டல் மூலம் பங்கேற்று தங்களது விலைப்புள்ளிகளை சமர்ப்பித்தன. குறைந்த விலைப்புள்ளியை வழங்கிய *ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ்* நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
70:30 என்ற அடிப்படையில் பணி ஆணை
ஜூன் மாதம் முதல் அடுத்த நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை முதல் கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு முறையே 70:30 என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க திட்டம்
அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பை மகிழ்ச்சியான நினைவாக மாற்றுவதுடன், தமிழக அரசின் சுகாதார சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1,28,499 குழந்தைகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அடுத்தகட்ட விநியோகப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

