இந்தியாவில் இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களின் அளவும் பிரம்மிக்க வைக்கும் வகையில் உயர்ந்துள்ளது. கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஒரு நிமிடத்திலும் ஃபேஸ்புக் (Facebook) , எக்ஸ் (Twitter) , இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுமார் 90 ஆயிரம் பதிவுகள் பகிரப்படுகின்றன.
ஒரு நிமிடத்தில் என்ன நடக்கிறது?
ஒவ்வொரு 60 விநாடிகளிலும் இந்திய பயனர்களால் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ஃபேஸ்புக் – Facebook
ஒரு நிமிடத்தில் சுமார் 66,000 புகைப்படங்கள் மற்றும் ஸ்டேட்டஸ்கள் பதிவேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் – Twitter
பயனர்கள் சுமார் 14,500 பதிவுகளை ஒவ்வொரு நிமிடமும் பகிர்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் – Instagram
ஒரு நிமிடத்தில் சுமார் 8,200 புதிய புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவேற்றப்படுகின்றன.
யூடியூப் – Youtube
வீடியோ பதிவேற்றத்திலும் இந்தியாவின் இணையப் பயன்பாடு வேகமாக இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் சுமார் 94 மணி நேரத்துக்கு சமமான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன.
கிராமங்களிலும் அதிகரிக்கும் இணைய பயன்பாடு
இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு நகரங்களைத் தாண்டி கிராமப்புறங்களிலும் வேகமாக விரிவடைந்து வருவது இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், குறைந்த விலையில் கிடைக்கும் இணைய டேட்டா மற்றும் ஸ்மார்ட்போன்களின் பரவலான பயன்பாடு, மக்கள் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மக்கள் உடனுக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புள்ளிவிவரங்கள், இந்தியர்கள் அன்றாட வாழ்க்கையில் இணையத்துடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இணைந்துள்ளனர் என்பதையும், ஒவ்வொரு நாளும் உருவாகும் டிஜிட்டல் தகவல்களின் பிரம்மாண்ட அளவையும் வெளிப்படுத்துகின்றன.

