குழந்தைகள் நீண்ட நேரம் செல்போன் (Mobile Phones) , டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவது பெற்றோருக்கு பெரும் கவலையாக உள்ளது. மொபைலை திடீரென நிறுத்தச் சொன்னால் சில குழந்தைகள் அழுவது, கோபப்படுவது, அடம்பிடிப்பது போன்ற எதிர்வினைகளை வெளிப்படுத்தலாம். இதுபோன்ற சூழலில் கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, படிப்படியாக திரை நேரத்தை குறைக்கும் அணுகுமுறை சிறந்ததாக இருக்கும்.
1. தினசரி பயன்பாட்டுக்கு வரம்பு வையுங்கள்
குழந்தை எப்போது, எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்தலாம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள். உணவு சாப்பிடும்போது, படிக்கும் நேரத்தில், தூங்குவதற்கு முன்பு போன்ற நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கும் பழக்கத்தை உருவாக்கலாம்.
2. திடீரென மொபைலை பறிக்க வேண்டாம்
குழந்தை மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அதை எடுத்துவிடுவது கோபத்தை அதிகரிக்கலாம். அதற்கு பதிலாக, நேரம் முடியப் போவதை முன்கூட்டியே சொல்லுங்கள். இன்னும் 10 நிமிடங்களில் மொபைலை வைக்க வேண்டும் என்று தெரிவித்து, பின்னர் மீண்டும் நினைவூட்டலாம். இதனால் குழந்தை மனதளவில் தயாராகும் வாய்ப்பு கிடைக்கும்.
3. மொபைலுக்கு மாற்றாக ஆர்வமான செயல்களைத் தருங்கள்
திரை நேரத்தை குறைக்கும்போது குழந்தைக்கு மாற்றாக ஏதாவது சுவாரஸ்யமான செயல்பாடு இருக்க வேண்டும். ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, புதிர்கள் விளையாடுவது, பொம்மைகளுடன் விளையாடுவது, வெளியில் விளையாடுவது போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம். குழந்தைக்கு பிடித்த செயல்பாடுகளை கண்டறிந்து அதில் ஈடுபடுத்துவது மொபைல் மீதான கவனத்தை குறைக்க உதவும்.
4. பெற்றோரும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்
குழந்தைக்கு மட்டும் “மொபைல் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிவிட்டு, பெற்றோர் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் அந்த விதியை குழந்தை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். எனவே, குடும்பத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஸ்கிரீன் இல்லாத நேரமாக’* மாற்றுவது நல்லது. அந்த நேரத்தில் பெற்றோரும் செல்போனை ஒதுக்கி வைத்தால் குழந்தைகளும் அதை எளிதாகப் பின்பற்றுவார்கள்.
5. அழும்போது மீண்டும் மொபைல் கொடுக்காதீர்கள்
மொபைல் நேரம் முடிந்ததும் குழந்தை அழுதால், அதை நிறுத்துவதற்காக மீண்டும் செல்போனை கொடுப்பதை வழக்கமாக்கக் கூடாது. அவ்வாறு தொடர்ந்து நடந்தால், அழுதால் மொபைல் கிடைக்கும் என்ற எண்ணம் குழந்தைக்கு உருவாகலாம். அதற்கு பதிலாக குழந்தையின் உணர்வை புரிந்துகொண்டு அமைதியாக பேசி, வேறு செயல்பாட்டில் கவனத்தை திருப்பலாம்.
மொபைலை வைத்து குழந்தையை சமாதானப்படுத்துவது சரியா?
குழந்தை அழும்போதோ கோபப்படும்போதோ உடனடியாக செல்போனை கொடுத்து அமைதிப்படுத்துவது நீண்டகாலத்தில் அவர்களின் உணர்வுகளை கையாளும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, ஒவ்வொரு முறையும் மொபைலை ஒரு சமாதானப்படுத்தும் கருவியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, குழந்தையுடன் பேசுவது, அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது மற்றும் மாற்று செயல்பாடுகளை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக, மொபைல் பயன்பாட்டை ஒரே நாளில் முழுமையாக நிறுத்த முயற்சிப்பதைவிட, தெளிவான விதிமுறைகளுடன் படிப்படியாக குறைப்பதே குழந்தைக்கு எளிதான மாற்றமாக இருக்கும்.

