தமிழ்நாட்டில் குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் (3 Free LPG Cylinders) வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் முதற்கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார். அதில், குடும்பத் தலைவிகளுக்கு பயனளிக்கும் வகையில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பொங்கல் முதல் திட்டம் அமல்
வரும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட தகுதியான பயனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4,000 கோடி ஒதுக்கீடு
சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிதிச்சுமையை குறைப்பதுடன், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதே சட்டப்பேரவை உரையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது மற்றும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார்.


[…] பயன்படுத்த முடியும் என முதல்வர் தெரிவித்தார். மேலும், […]