தமிழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2010-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு
2010 ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
3.28 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்பு
TET கட்டாயம் காரணமாக தமிழகத்தில் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவர்களில் பலர் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இடையூறு இல்லாமல் பணியாற்றி வருவதாகவும், பணிக்காலத்தின் பெரும்பகுதியை நிறைவு செய்துள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை தற்போது மீண்டும் தகுதித் தேர்வு எழுதச் சொல்வது அவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
பணி உயர்வு, சலுகைகள் பாதிக்கக்கூடாது
TET தேர்வு தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய ஆசிரியர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட பணிப் பலன்கள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கோரிக்கை
இந்த விலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக 2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மூலம் தெளிவான வழிகாட்டுதல்கள் அல்லது அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் ஆதரவு
இந்த தீர்மானத்துக்கு சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நீண்டகாலமாக பணியாற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

