தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
மாணவிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மாணவிகளுக்கு தனியாக பாதுகாப்பான மற்றும் பூட்டக்கூடிய கழிப்பறைகள் அமைப்பது தொடர்பான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
பள்ளிகளில் வகுப்பறைகள் மட்டுமின்றி, மாணவர்களுக்கு தேவையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடிப்படை வசதிகளும் முறையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பள்ளிகளின் வசதிகள் குறித்து ஆய்வு
அரசுப் பள்ளிகளில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பள்ளிகளின் தேவைகள் குறித்து முழுமையான அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
திமுக எம்.எல்.ஏ. எதிர்ப்பு
அமைச்சரின் கருத்துக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் ஏராளமான வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தமிழக பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார். தேவையான இடங்களில் புதிய வசதிகளை உருவாக்கலாம்; ஆனால் பள்ளிகளில் வசதிகள் இல்லை என பொதுவாக கூறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பள்ளிகளில் ‘ரீல்ஸ்’ எடுக்க வேண்டாம்
பள்ளிகளை ஆய்வு செய்வதாகக் கூறி சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக ‘ரீல்ஸ்’ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார். பள்ளிகளுக்குச் செல்வோர் விளம்பர நோக்கத்தைவிட, மாணவர்களின் கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

