முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்”
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறிய திமுக, தனது தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை. இதை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தவெக ஆட்சியின் அடுத்த ஐந்து ஆண்டுகள் (Vijay’s 5-Year Rule) விவசாயிகளுக்கு பொற்காலமாக அமையும்” என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காகவே தவெக
சட்டப்பேரவையில் பேசிய அவர், திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என உறுதியாகக் கூறி வருவதாகவும், அதே நேரத்தில் முதல்வர் விஜய் தன்னை விவசாயி எனக் குறிப்பிட்டதை திமுக உறுப்பினர்களே சட்டப்பேரவையில் பலமுறை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் முதல் தேர்தல் பிரச்சாரமே பரந்தூரில் விவசாயிகளை மையமாகக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, அப்போதே விவசாயிகளின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணிப்பதாக விஜய் உறுதியளித்ததாக கூறினார்.
தவெக தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி இடம்பெற்றிருந்த நிலையில், அதனை செயல்படுத்தும் வகையில் ரூ.5,932 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் தொடர்பான வாக்குறுதி இடம்பெறவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
விவசாயிகளின் கடன் பிரச்னை குறித்து திமுக ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளுக்கான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே திமுகவிடம் இல்லை என குற்றம்சாட்டினார். ஆனால், முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து பொதுமக்களிடையே புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், தரமான அரிசியை வழங்கும் நோக்கத்திலேயே சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து, நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கரும்பு சாகுபடி மற்றும் உற்பத்தி திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையாகக் குறைந்ததாக குற்றம்சாட்டிய ஆதவ் அர்ஜுனா, ஐந்து ஆண்டுகால ஆட்சியுடன் மூன்று மாத ஆட்சியை ஒப்பிடுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.
“தவெக ஆட்சியின் அடுத்த ஐந்து ஆண்டுகள் விவசாயிகளுக்கு பொற்காலமாக இருக்கும். முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

