நெல் மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அவர், விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை பயிரிடுவது முதல் அறுவடை செய்து விற்பனை செய்வது வரை தங்களது உழைப்பு, பொருள், நேரம் என அனைத்தையும் செலவிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் நிதிநிலை சவாலாக இருந்தாலும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஊக்கத் தொகை உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நெல்லுக்கான ஊக்கத் தொகை உயர்வு
நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
- சன்ன ரக நெல்: குவிண்டாலுக்கு ரூ.2,750
- பொது ரக நெல்: குவிண்டாலுக்கு ரூ.2,600
இதன்படி, சன்ன ரக நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.289-ம், பொது ரக நெல்லுக்கான ஊக்கத் தொகை ரூ.159-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஓராண்டில் நெல்லுக்கான ஊக்கத் தொகையை ரூ.156-க்கும் அதிகமாக உயர்த்தி வழங்குவது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளுக்கும் கூடுதல் ஊக்கத் தொகை
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,290.50 என நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கூடுதலாக ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு மொத்தம் ரூ.4,000 வழங்கப்படும்.
ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.134-க்கும் அதிகமான சிறப்பு ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதன்முறை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

