ஆகஸ்ட் 24 முதல் சிம் கார்டு பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் (SIM CARD) அமலுக்கு வருகின்றன. ஒருவரின் பெயரில் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருந்தால் கூடுதல் இணைப்புகள் முடக்கப்படலாம்.
இந்தியாவில் சிம் கார்டு பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், சைபர் குற்றங்களைத் தடுக்கவும் தொலைத்தொடர்பு துறையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒருவரின் அடையாளச் சான்றிதழின் கீழ் வைத்திருக்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 9 சிம் கார்டுகள்
தமிழ்நாட்டில் ஒரு நபரின் ஆதார் அல்லது அடையாளச் சான்றிதழின் கீழ் அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதி உள்ளது. ஆகஸ்ட் 24, 2026 முதல் இந்த விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. 9-க்கும் மேற்பட்ட எண்கள் உங்கள் பெயரில் பயன்பாட்டில் இருந்தால், கூடுதல் சிம் இணைப்புகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் முடக்கப்படலாம். மேலும், ஏற்கனவே 9 எண்கள் உள்ளவர்கள் புதிய சிம் கார்டு பெறுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
DIP மூலம் கண்காணிப்பு
போலி ஆவணங்கள் மற்றும் பிறரின் அடையாளத்தைப் பயன்படுத்தி சிம் பெறுவதைத் தடுக்கும் வகையில், Jio, Airtel, Vi, BSNL உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் Digital Intelligence Platform (DIP) உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒருவரின் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகள் கண்காணிக்கப்படுகின்றன.
சிம் எண்ணிக்கையை எப்படி சரிபார்ப்பது?
உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் உள்ளன என்பதை TAFCOP தளத்தில் சரிபார்க்கலாம். உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு, Captcha மற்றும் OTP மூலம் உள்நுழைந்தால், உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களின் பட்டியலைக் காணலாம்.
தெரியாத எண் இருந்தால் புகார்
பட்டியலில் உங்களுக்குத் தெரியாத எண் இருந்தால் ‘Not My Number’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து புகாரளிக்கலாம். தேவையில்லாத பழைய எண்ணுக்கு ‘Not Required’ என்பதைத் தேர்வு செய்யலாம். இதன் மூலம் உங்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத சிம் இணைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

