தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, கிராமிய வாழ்க்கையையும் மனிதர்களின் உணர்வுகளையும் திரையில் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில், தேனியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ரூ.2.50 கோடியில் மணிமண்டபம்
பாரதிராஜாவின் திரையுலக சாதனைகளை நினைவுகூரும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமும் இருந்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக அரசு அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த ஜூன் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பாரதிராஜா காலமானார். அவரது உடல் தேனி மாவட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது கலைப்பணிக்கும் திரைத்துறை பங்களிப்புக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த மணிமண்டபம் அமைய உள்ளது. மணிமண்டபத்தில் பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்படப் பயணத்தை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய கலைப் பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பாரதிராஜாவின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

