தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
யார் தகுதி பெறுவார்கள்?
ஆரம்பக் கல்வி முதல் அரசு வேலைக்குத் தேவையான கல்வித் தகுதி வரை முழுமையாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் இந்த முன்னுரிமையைப் பெற தகுதியுடையவர்கள். பிற மாநிலங்களில் தமிழ்வழியில் படித்து, பின்னர் தமிழகத்தில் அதே முறையில் கல்வியைத் தொடர்ந்தவர்களுக்கும் விதிகளுக்கு உட்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வை மட்டும் தமிழில் எழுதினால் போதாது
வேறு மொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்துவிட்டு, போட்டித் தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. தமிழ்வழிக் கல்வி பயின்றதற்கான கல்விச் சான்றிதழ்கள் அவசியம்.
தனித்தேர்வர்களுக்கு விதிமுறைகள்
வழக்கமான பள்ளிக் கல்வியைத் தொடராமல் தனித்தேர்வராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது. எனினும், பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வியடைந்து பின்னர் தனித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள், தொடர்ந்து தங்களது கல்வியை தமிழ்வழியில் முடித்திருந்தால் விதிகளின்படி தகுதி பெறலாம்.
சான்றிதழ் முக்கியம்
இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் பயின்ற கல்வி நிறுவனங்களிடம் இருந்து தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான உரிய சான்றிதழ்களைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

