கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை (Amuthan Murder) செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்தார்.
போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மாணவர் அமுதன் கொலை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக மாணவர் புகார் அளித்ததன் காரணமாகவே கொலை நடந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவதுடன், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்விரோதமே முக்கிய காரணம்
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம் என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி சித்தரிக்க வேண்டாம் என்றும், உண்மை நிலவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கோ, காவல்துறைக்கோ இல்லை என்றும் அவர் கூறினார்.
3 மாதங்களில் குற்றப்பத்திரிகை
அமுதன் கொலை வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

