2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த மாநாட்டில் பேசிய விஜய், விஜயகாந்தை என் அண்ணன் என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு, ”விஜய் எங்கள் வீட்டு பையன் மாதிரி” என்று பிரேமலதா விஜயகாந்தும் பதிலளித்து இருந்தார்.
இந்த நிலையில் அவர், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
முதல்முறையாக விஜயகாந்த் தலைமையில் 2006 இல் தே.மு.தி.க. எப்படி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டுத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோன்ற தாக்கத்தை 2026 இல் விஜய் ஏற்படுத்துவார் என்றார்.
நான் தினமும் மீடியாவைச் சந்திக்கிறேன். மக்கள் பிரச்சினையை விட, கூட்டணி அல்லது விஜய் பற்றியக் கேள்விகளையே கேட்கிறீர்கள். இனி விஜய் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்; கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் -பிரேமலதா
இந்தியாவில் 100% தேர்தல் நியாயமாக நடைபெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரேமலதா, தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வேட்பாளர்கள் போட்டியிடுவதும், பணம் செலவு செய்வதும் வீணாகி விடும் என்றார்.

