அ.தி.மு.க. விதிகள் திருத்தத்தை எதிர்த்து, வழக்குத் தொடர அனுமதி அளித்திருந்த தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று (ஆகஸ்ட் 29) இரத்து செய்துள்ளது.
பின்னணி
2022 ஆம் ஆண்டு சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது கட்சி விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து, இராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோர், தாங்கள் கட்சி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில், உரிமையியல் வழக்குத் தொடர அனுமதி கோரினர். அவர்களுக்கு நீதிபதி வேல்முருகன் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
மேல்முறையீடு
அந்த உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இராம்குமார் ஆதித்தன், சுரேன் ஆகியோர் கட்சி உறுப்பினர்களே அல்ல. கட்சியில் மாற்றங்களும் நடந்துள்ளதால் இவர்களின் கேள்விகள் பொருந்தாது என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் வாதிடப்பட்டது. தாங்கள் உறுப்பினர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன, அதை வைத்துதான் தனி நீதிபதி எங்களுக்கு வழக்குத் தொடர அனுமதியே கொடுத்திருந்தார் என்று எதிர்மறைத் தரப்பும் வாதத்தை முன்வைத்தது.
இன்றைய தீர்ப்பு
இருதரப்பு வாதங்களையும், நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்று, தனி நீதிபதி வழங்கிய உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு இரத்து செய்து உத்தரவிட்டது.

