உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள், அஸ்தியைக் கரைப்பதைப் போல, வைகை ஆற்றில் கொட்டப்பட்டுக் கிடந்ததாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முகாம்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள், ஆவணங்களில் பெயர்த் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்து வருகின்றனர். இதில் மகளிர் உரிமைத் தொகை கேட்டுக் கொடுக்கப்படுகிற மனுக்கள் தான் அதிகம் என்றுகூட செய்தி வந்தது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வைகை ஆற்றில் மனுக்கள் கொட்டப்பட்டுக் கிடந்ததைக் கண்டு, காவல் துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர். ஆற்றில் கிடந்த மனுக்களை சேகரித்த போலீசார், அதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
மனுக்கள் ஆற்றில் கொட்டப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தி.மு.க. அரசு ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியைக் கரைப்பதைப் போல, சிவங்கங்கை வைகையாற்றில் கொட்டப்பட்டிருக்கிறது -எடப்பாடி பழனிசாமி
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்துகொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல நாடகமாடிய இந்த அரசிற்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள்,
இன்று சிவகங்கை, திருப்புவனம்
வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு ,
எனது கடும் கண்டனங்கள்.எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக… pic.twitter.com/tfOiu35fXa
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 29, 2025

