கோவிலுக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கம் திருக்கோவில்களில் புதிய கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்குத் தடை
இடன்படி, வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் கோவில் வளாகங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. (Mobile Phones Banned) கோவிலுக்குள் புகைப்படங்கள் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, ‘செஃபி’ எடுப்பது மற்றும் ‘ரீல்ஸ்’ படப்பிடிப்பு நடத்துவது போன்ற செயல்களுக்கு முற்றிலும் அனுமதி கிடையாது.
விதியை மீறி கோவில் வளாகத்திற்குள் படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்படும் எனத் துறை ரீதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பெட்டகங்கள் மற்றும் கட்டணம்
பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல கோவில் நுழைவுவாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களில் தனிப் பெட்டகங்கள் (Lockers) அமைக்கப்படும்.
ஒரு செல்போனைப் பாதுகாப்பாக வைக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான ரசீதுகள் ITMS மென்பொருள் வாயிலாக வழங்கப்படும்.
தடை குறித்த தகவல்கள் அறிவிப்புப் பலகைகள் மூலம் தெரிவிக்கப்படும். விதிகளை மீறுபவர்களைக் கண்டறிய சிறப்புக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சி.சி.டி.வி (CCTV) கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி-க்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள்
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் (VIPs) வருகையின் போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளையும் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார்
முன்அறிவிப்பு அவசியம்: வி.ஐ.பி-க்கள் தரிசனம் செய்ய வரும்பட்சத்தில், குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக கோவில் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறில்லை: முக்கியப் பிரமுகர்கள் வருகையால் பொது வரிசையில் நிற்கும் பக்தர்களின் தரிசனத்திற்கு எவ்வித தடங்கலும் ஏற்படக் கூடாது.
படப்பிடிப்பிற்கு அனுமதி இல்லை: வி.ஐ.பி தரிசனத்தின் போதும் கோவில் உட்பகுதியில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நபர்களுக்குக் கட்டுப்பாடு: பாதுகாப்பு மற்றும் கோவில் நிர்வாகப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய நபர்கள் மட்டுமே வி.ஐ.பி-க்களுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.
திருக்கோவில்களில் அமைதியான வழிபாட்டுச் சூழலை உருவாக்கவும், ஆகம நடைமுறைகளைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

