ஒரே விமான எண்ணுடன் இரண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் வானில் பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் சரியான நேரத்தில் இந்தக் குழப்பத்தை கண்டறிந்ததால், மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
ஒரே விமான எண்ணில் பறந்த 2 விமானங்கள்
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 2482 என்ற விமான எண் கொண்ட ஒரு விமானம் சிகாகோவில் இருந்து பீனிக்ஸ் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், பீனிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து மற்றொரு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
பொதுவாக ஒரே விமான எண் கொண்ட விமானங்கள் ஒரே நேரத்தில் ஒரே வான்வெளியில் இயங்காத வகையில் திட்டமிடப்படும். ஆனால், சிகாகோவில் இருந்து வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமானதால் இந்தச் சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதத்தை சமாளிக்க பீனிக்ஸில் இருந்து மற்றொரு விமானம் இயக்கப்பட்டபோது, இரண்டு விமானங்களும் ஒரே 2482 என்ற அழைப்புக் குறியீட்டில் செயல்பட்டன.
ஆபத்தை கண்டறிந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்
இரண்டு விமானங்களும் ஒன்றையொன்று நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், பீனிக்ஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இந்த அசாதாரண நிலையை கவனித்தார்.
ஒரே அழைப்புக் குறியீட்டைக் கொண்ட இரண்டு விமானங்களையும் குழப்பமின்றி கையாள, கட்டுப்பாட்டாளர் அவற்றை “வரும் American 2482” மற்றும் “புறப்படும் American 2482” எனத் தனித்தனியாக அழைக்கத் தொடங்கினார்.
மேலும், இரண்டு விமானங்களும் ஒரே உயரத்தில் செல்லாமல் இருக்க தேவையான உத்தரவுகளை விமானிகளுக்கு வழங்கினார். புறப்பட்ட விமானம் அதிக உயரத்துக்கு செல்லாமல் பார்த்துக் கொண்டதுடன், வந்து கொண்டிருந்த விமானத்தையும் பாதுகாப்பான உயரத்தில் வைத்திருந்தார். இதன் மூலம் இரண்டு விமானங்களுக்கும் இடையிலான தேவையான பாதுகாப்பு இடைவெளி தொடர்ந்து பராமரிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில், கட்டுப்பாட்டாளர் ஒரு விமானியின் கவனத்துக்கு அருகில் மற்றொரு விமானம் இருப்பதை கொண்டு வந்தார். விமானியும் அந்த விமானத்தை பார்வையில் கண்டதாகத் தெரிவித்தார்.
இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக ஒன்றைக் கடந்து சென்ற பிறகு, விமானி கட்டுப்பாட்டாளரின் பணியைப் பாராட்டினார். அதற்கு பதிலளித்த கட்டுப்பாட்டாளர், இந்தச் சம்பவம் மிகப்பெரிய விபத்தில் முடிந்திருக்கக்கூடும் என்றும், ஆனால் அது தவிர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.
விமானப் பாதுகாப்பு நிபுணர்களின் பார்வையில், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு அல்லது டிஸ்பாட்ச் பிரிவில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் ஒரே அழைப்புக் குறியீட்டைப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
விசாரணை தொடக்கம்
சம்பவம் குறித்து அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) மற்றும் American Airlines ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.
எனினும், இந்தச் சம்பவத்தில் இரண்டு விமானங்களும் தேவையான பாதுகாப்பு இடைவெளியை பராமரித்ததாகவும், இரு விமானங்களும் எந்தவித பாதிப்புமின்றி தங்களது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் American Airlines தெரிவித்துள்ளது.

