செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ‘டீப் ஃபேக்’ (Deepfake) மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.
Deepfake முறையில் அரங்கேறும் சைபர் மோசடி
முன்பு சைபர் குற்றவாளிகள் பெரும்பாலும் ஓடிபி உள்ளிட்ட தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி பல்வேறு புதிய முறைகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
AI மூலம் உருவாக்கப்படும் போலி முகம், குரல்
‘டீப் ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் மூலம் தெரிந்த நபர்களின் முகம், குரல் மற்றும் உடல் அசைவுகளை அச்சு அசலாக உருவாக்கி, அவசர உதவி தேவைப்படுவது போல நடித்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
AI மூலம் ஒருவர் பேசாத விஷயத்தைப் பேசியது போலவும், செய்யாத செயலைச் செய்தது போலவும் போலியான வீடியோ, புகைப்படம் அல்லது ஆடியோவை உருவாக்க முடியும். இவை உண்மையானவை போலவே தோன்றுவதால், பொதுமக்கள் எளிதில் ஏமாற வாய்ப்புள்ளதாக சிபிஐ (CBI) தெரிவித்துள்ளது.
வீடியோ கால் மூலம் பணம் கேட்பவர்களிடம் உஷார்
திடீரென வரும் வீடியோ அழைப்புகள், குரல் செய்திகள் அல்லது அவசரமாக பணம் கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நம்ப வேண்டாம். பணம் அனுப்புவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரை வேறு வழியில் தொடர்புகொண்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், சந்தேகத்திற்கிடமான வீடியோ, புகைப்படம் அல்லது ஆடியோவை மற்றவர்களிடம் பகிர்வதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.
மோசடி நடந்தால் உடனடியாக புகார்
இணையவழி மோசடியில் (Deepfake) பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் *1930* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மேலும், *cybercrime.gov.in* இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம்.
AI உருவாக்கும் போலிகளை விட உங்கள் விழிப்புணர்வே முக்கிய பாதுகாப்பு. எந்த தகவலையும் நம்புவதற்கு முன் ஒன்றுக்கு இருமுறை சரிபார்ப்பது அவசியம்.*

