மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. குடும்ப நலன், செல்வ வளம், ஆரோக்கியம் உள்ளிட்டவற்றுக்காக பெண்கள் இந்த நாளில் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது வழக்கம்.
வரலட்சுமி விரதம் – பூஜை நேரங்கள்
வரலட்சுமி விரதத்தையொட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி காலை 10.40 முதல் 11.40 மணி வரையிலும், மாலை 6 மணிக்குப் பிறகும் அம்மனை வீட்டிற்கு அழைக்கலாம். ஆகஸ்ட் 21-ம் தேதி காலை 6 முதல் 7.20 மணி வரையிலும் அழைக்கும் நேரம் உள்ளது. பூஜையை காலை 9 முதல் 10.20 மணி, 10 முதல் 12 மணி அல்லது மாலை 6 மணிக்குப் பிறகு மேற்கொள்ளலாம்.
கலசம் வைப்பது எப்படி?
கலசம் வைக்க விரும்புவோர் செம்பு, பித்தளை அல்லது வெள்ளிக் குடத்தைப் பயன்படுத்தலாம். அதில் தண்ணீர் அல்லது அரிசியை நிரப்பி, எலுமிச்சை, ஏலக்காய், கிராம்பு, நாணயங்கள் போன்றவற்றை சேர்க்கலாம். மஞ்சள் தடவிய தேங்காயை மேலே வைத்து, மாவிலைகளைச் செருகி கலசத்தை அலங்கரிக்க வேண்டும். அம்மன் முகம் இருந்தால் அதையும் பொருத்தி, பட்டுப்புடவை, பூக்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கலாம்.
பின்னர் கலசத்தை கோலமிட்ட இடத்தில் வைத்து மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்று பூஜை செய்ய வேண்டும். தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. 108 போற்றிகளைச் சொல்லி குங்குமம், அட்சதை, மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வெண் பொங்கல், பழங்கள் உள்ளிட்டவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வழங்கும் வழக்கம்
பூஜை நிறைவில் நோன்புக் கயிறை அணிந்து, பெரியவர்களிடம் ஆசி பெறுவதுடன் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வழங்கி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

