நிதியமைச்சர் மரிய வில்சன், (Maria Wilson) சட்டப்பேரவையில் தனது தமிழ் உச்சரிப்பு குறித்து எழுந்த விமர்சனத்துக்கு அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பேசிய விதத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழை அவமதிப்பதா?” – சீமான் கேள்வி
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது, அமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் சில எண்களை உச்சரித்ததில் ஏற்பட்ட தடுமாற்றம் குறித்து ம.தி.மு.க. எம்எல்ஏ ராஜேந்திரன் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தனது மதம் தனக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுத்துள்ளதாகவும், எவ்வளவு படித்தாலும் தமிழில் கூட அதனை கற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு தமிழை அவமதிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
அரசியல் முதிர்ச்சி என்பது தவறை திருத்திக்கொள்வது
இந்த விவகாரம் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் உலகுக்கு மானுடத்தையும் கருணையையும் போதித்த மொழி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் தனது உச்சரிப்பில் இருந்த தவறை சுட்டிக்காட்டியபோது அதனை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வதுதான் அரசியல் முதிர்ச்சி என்றும், ஆனால் அதற்கு மாறாக அமைச்சர் ஆணவத்துடன் பதிலளித்ததாகவும் சீமான் விமர்சித்துள்ளார்.
உலகம் முழுவதும் தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
செந்தமிழில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும் போதே தமிழை உச்சரிப்பதில் தடுமாறுவது அந்த அவைக்கு இழுக்காகாதா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், பிற மாநிலங்களில் உள்ளவர்களும் சட்டப்பேரவை நிகழ்வுகளை கவனித்து வரும் நிலையில், தங்களது தவறை சுட்டிக்காட்டும்போது கோபப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் மதத்தை மதிக்கிறோம்; தமிழை அவமதிக்க உரிமை இல்லை
தான் பிறப்பால் கிறித்தவர் என்றும், தனக்கு அன்பை தனது மதம் போதித்ததாகவும் அமைச்சர் (Maria Wilson) கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய சீமான், கிறித்தவ மதம் அன்பை போதித்ததை தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், “தமிழ் எவ்வளவு படித்தாலும் அன்பை போதிக்காது” என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும், தமிழை அவ்வாறு விமர்சிக்க அமைச்சருக்கு என்ன உரிமை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் அன்பை உலகமே கண்டதே
மேலும், அமைச்சர் மரிய வில்சனின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை சுட்டிக்காட்டி சீமான் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
உருட்டுக்கட்டையால் உடன்பிறந்த தம்பியின் குடும்பத்தை தாக்கிய உங்களுடைய அன்பையும், இரக்கத்தையும் தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே” என அவர் தனது பதிவில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழைத் தவறாக உச்சரிப்பதும், அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் பேசுவதும், கிறித்தவ மதத்தை தேவையின்றி விவாதத்துக்குள் கொண்டு வருவதும் கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். மேலும், தனது பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் அதே சட்டப்பேரவையில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

