பாமக-வில் தலைவர் பதவிக்கு உரிமை கோரும் விவகாரம், தொடர்ந்து சர்ச்சையாகி வருகிற நிலையில், அன்புமணிக்கே தலைவர் பதவி செல்லும் என்று, அவரின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு தெரிவித்துள்ளார். எனவே எந்த நீதிமன்றத்துக்குச் சென்றாலும் ராமதாஸ் தரப்பு வெற்றி பெற முடியாது என அவர் கூறியுள்ளார்.
பாமகவில் தந்தை – மகன் மோதல் தீவிரமாகி வரும் நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆகிய இருவருமே தலைவர் பதவிக்கு உரிமை கோரி மாறிமாறி தேர்தல் ஆணையத்தை நாடினர். இதைத் தொடர்ந்து, 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அன்புமணியே பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக நீடிப்பார் என்று தேர்தல் ஆணையமும் தெளிவாக அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அங்கீகரிக்கப்படாத கட்சி உரிமை தொடர்பான பிரச்சினையில், ஒரே தரப்பின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, அவர்களை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவித்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, தமக்கு சாதகமாக அமைந்துள்ளதை ராமதாஸ் தரப்பு கொண்டாடியது.
மேலும் அன்புமணிதான் தலைவர் என சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் செல்லாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இது ராமதாஸ் மற்றும் அவரது அணிக்கு பெரிய வெற்றி என ராமதாஸ் ஆதரவாளர் ஜி. கே. மணி தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலு, டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை வைத்து ராமதாஸ் தரப்பு கொண்டாடுவதை பார்க்கும் போது விநோதமாகவும், கோமாளித்தனமாகவும் இருக்கிறது என்றார். உரிமையியல் நீதிமன்றத்தில், முடிந்தால் ராமதாஸ் தரப்பு வெற்றியை பெற்றுக் காட்டட்டும் என்று சவால் விடுத்தார். எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும், அன்புமணியின் தலைவர் பதவியை மாற்ற முடியாது என்றும் பாலு சவால் விடுத்துள்ளார்.

