இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் – பாடகர் பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நவம்பர் 23 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் அது முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் பரவின. இதுகுறித்து நீண்டநாள் மௌனம் காத்த ஸ்மிருதி மந்தனா, இப்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி பல்வேறு ஊகங்கள் பரவின. நான் பொதுவாக என் தனிப்பட்ட விஷயங்களை வெளியில் பேசுபவள் அல்ல. இருப்பினும், திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை தெளிவுபடுத்துகிறேன். இந்த விஷயத்தை இங்கேயே முடித்துக் கொள்ளுங்கள். இரு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறேன்.
என்னை இயக்குவது உயர்ந்த ஒரு நோக்கம் — அது இந்தியாவுக்காக விளையாடுவதே. எனது முழு கவனமும் கிரிக்கெட்டில் தான் இருக்கும். இந்தியாவிற்காக அதிக காலம் விளையாடி கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன் என கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.

