உலகின் பல்வேறு நாடுகளில் குடிநீருக்கான தேவை (Drinking Water) அதிகரித்து வரும் நிலையில், கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு வித்தியாசமான திட்டம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. துருவப் பகுதிகளில் காணப்படும் மிகப்பெரிய பனிப்பாறைகளை கப்பல்கள் மூலம் தொலைதூர நாடுகளுக்கு கொண்டு சென்று, அவற்றை உருக்கி குடிநீராக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பே உருவான திட்டம்
பனிப்பாறைகளை கடல் வழியாக இழுத்து வந்து குடிநீராக (Drinking Water) பயன்படுத்தும் யோசனை தற்போது உருவானதல்ல. 1977-ம் ஆண்டிலேயே சவுதி அரேபிய இளவரசர் முகமது அல்-பைசல் இந்தத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.
அரேபிய தீபகற்பத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, துருவப் பகுதிகளில் இருந்து பனிப்பாறைகளை கொண்டு வருவது குறித்து அப்போது திட்டமிடப்பட்டது. இதன் சாத்தியக்கூறை சோதிக்கும் வகையில், அலாஸ்கா பகுதியில் இருந்து சுமார் 1.5 டன் எடையுள்ள பனிப்பாறை ஒன்றை கப்பல் மூலம் கொண்டு வந்து செயல்விளக்கம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வரம்புகள் திட்டத்திற்கு மிகப்பெரிய தடையாக அமைந்தன. குறிப்பாக, நீண்ட கடல் பயணத்தின்போது பனிப்பாறை உருகுவதைத் தடுப்பது, அதற்கான அதிகப்படியான போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட பிரச்சினைகளால் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.
இப்போது தொழில்நுட்பமும் மாறிவிட்டது!
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த யோசனை மீண்டும் உயிர்பெறுவதற்கு முக்கிய காரணமாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் குறைதல் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக உலகின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமாகி வருகிறது. குறிப்பாக பாலைவனப் பகுதிகள் அதிகம் உள்ள நாடுகளில் குடிநீருக்கான தேவை மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
இதனால், பழைய திட்டத்தை தற்போதைய தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பொறியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
செயற்கைக்கோள் மூலம் பனிப்பாறை தேடல்
பனிப்பாறைகளை எங்கு கண்டறிவது முதல் அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டு வருவது வரை பல்வேறு அம்சங்கள் ஆய்வில் உள்ளன.
துருவப் பகுதிகளில் மிதக்கும் பனிப்பாறைகளின் அளவு, வடிவம் மற்றும் நகரும் தன்மை உள்ளிட்டவற்றை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணித்து, போக்குவரத்துக்கு ஏற்ற பனிப்பாறைகளை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கடல் பயணத்தின்போது சூரிய வெப்பம் மற்றும் கடல் நீரின் வெப்பநிலை காரணமாக பனிப்பாறை வேகமாக உருகுவதைத் தடுக்க பிரத்யேக பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
ஒரு பனிப்பாறை… பல லட்சம் மக்களுக்கு தண்ணீர்!
மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை ஒன்றை வெற்றிகரமாக கரைக்கு கொண்டு வந்து உருக்க முடிந்தால், அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பெருமளவில் பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் மூலம் தண்ணீர் (Drinking Water) பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீண்ட காலத்திற்கு குடிநீர் தேவையை சமாளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. பனிப்பாறையை இழுத்துச் செல்லும் கப்பல்களின் எரிபொருள் செலவு, பயணத்தின்போது ஏற்படும் பனிப்பாறை இழப்பு, கடல் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் கொண்டு வரப்பட்ட பனியை பாதுகாப்பாக சேமித்து குடிநீராக மாற்றுவது போன்ற பல சவால்கள் உள்ளன.
அதனால், “பனிப்பாறைகளை இழுத்து வந்து குடிநீர் (Drinking Water) பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?” என்ற கேள்விக்கு உறுதியான பதில் கிடைக்க இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறைவாகவும், பொருளாதார ரீதியாக சாத்தியமாகவும் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

