ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் (Water Quality) குறித்து எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
சிஏஜி ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ரயில் நிலையங்களில் உள்ள வாட்டர் கூலர்களில் இருந்து வழங்கப்படும் இலவச குடிநீரை ஆய்வு செய்தபோது, சில இடங்களில் ‘ஈ-கோலி’ உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருப்பது இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜி ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆலோசனை
இதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில், நாடு முழுவதும் ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாட்டர் கூலர்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் இடங்களில், ‘டேங்க் டு டாப்’ முறையிலான குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய நீர்த்தேக்கத் தொட்டிகள் மாற்றம்
குடிநீர் விநியோகத்தில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் பழைய நீர்த்தேக்கத் தொட்டிகளை அகற்றி, புதிய தொட்டிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வழக்கமான நீர்த் தரப் பரிசோதனை
குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விநியோக மையங்கள் என இரு நிலைகளிலும் வழக்கமான நீர்த் தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் தொட்டிகளை முறையாகச் சுத்தம் செய்தல், நீர்த் தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் பரிசோதனை அறிக்கைகளை வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 20 ஆயிரம் இடங்களில் இந்தக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

