சென்னை பெருநகர காவல் துறை சார்பில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களை இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் இணையவழி குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு சைபர் மோசடிகள் குறித்து விளக்கம்
இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தற்போது அதிகரித்து வரும் பல்வேறு வகையான சைபர் மோசடிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஆன்லைன் வர்த்தக மோசடி, ‘டிஜிட்டல் கைது’ மோசடி, போலி முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்ட இணையவழி குற்றங்கள் குறித்தும், இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்களும் மாணவர்களும் எவ்வாறு சிக்குகின்றனர் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் கூடுதல் கவனம்
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் போலீஸார் ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக, அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டால் 1930-ல் புகார்
இணையவழி குற்றத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக *1930* என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்றும், cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
2,500 மாணவிகள் உறுதிமொழி
நிகழ்ச்சியின் நிறைவாக, இணையவழி குற்றங்களுக்கு எதிராக விழிப்புடன் செயல்படுவதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என சுமார் *2,500 மாணவிகள் உறுதிமொழி* எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராணி மேரி கல்லூரி முதல்வர் கலைவாணி, இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையர் விஸ்வநாத் ஜெயன், உதவி ஆணையர்கள் மனோஜ்குமார், ராகவி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

