தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஆகஸ்ட் 31) ஓய்வுபெற்ற நிலையில், அவர் புதியதாக உருவாக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2023 ஜூன் 30 ஆம் தேதி முதல் தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநராக சங்கர் ஜீவால் பதவியில் இருந்து வந்தார்.
இதற்கிடையில், காவல்துறைக்கு இணையாக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான தனி ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசு 2022 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக சங்கர் ஜீவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
புதிய தீயணைப்பு ஆணையத்தின் முக்கிய பணி:
பட்டாசு விபத்துகள், தொழிற்சாலை தீ விபத்துகள் போன்ற பேரழிவுகளைத் தடுக்கும் வழிமுறைகளை உருவாக்குதல்
தீத் தடுப்பு முறைகளில் புதுமையை அறிமுகப்படுத்துதல்
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பயிற்சிகளை வழங்குதல்

சங்கர் ஜிவாலுடன், தமிழக போலீஸ் வீட்டுவசதித் துறை டிஜிபி சைலேஷ் குமாரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இருவருக்கும், சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வைத்து உரிய முறையில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

