பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தாம் தொடர்ந்த வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், தி.மு.க. மூத்தத் தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால், அவர் டென்சாகி அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றார்.
2024 ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி, அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, “திமுக ஃபைல்ஸ்” என்ற பெயரில், அக்கட்சியின் சில மூத்த நிர்வாகிகளின் சொத்து விவரங்களை வெளியிட்டார்.
இதையடுத்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியிருப்பதாகக் கூறி அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு, 100 கோடி ரூபாய் இழப்பீடுக் கேட்டு, மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 17 ஆம் தேதி இந்த வழக்கில் அண்ணாமலை விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில், டி.ஆர். பாலு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, ”எனக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், 10,800 கோடி ரூபாய் தவறான பணம் இவற்றில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். ஆனால், அந்த 21 நிறுவனங்களில், 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மீதமுள்ள 3 நிறுவனங்கள் சேலத்தில் இயங்குகின்றன” என்று குறிப்பிட்டார்.
மேலும், நீதிபதி முன்பு இன்று சாட்சியம் அளித்துள்ளேன். அடுத்த விசாரணை செப்டம்பர் 22 அன்று நடைபெற உள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், 2004-இல் செய்த ஊழல் காரணமாகவே 2009-இல் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று அண்ணாமலை கூறுகிறாரே என்று கேட்க, பாலு எரிச்சலானார்.
இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க யார் சொன்னார்? அல்லது நீங்களாகக் கேட்கிறீர்களா? – டி.ஆர்.பாலு
அண்ணாமலைக்கு நான் சரியான நேரத்தில் பதில் கொடுப்பேன் என்று கூறி முடித்த டி.ஆர்.பாலு, மறுபடியும் 10,000 கோடி ரூபாய் குறித்து செய்தியாளர்கள் அடுத்தடுத்துக் கேட்க, டென்சாகி அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றார்.

