விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று புதுச்சேரி போலீசார் அறிவித்துள்ளனர். மாநாட்டிற்கு புதுச்சேரியில் வசிக்கும் 5,000 பேருக்கே மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விஜய் புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கோரி த.வெ.க. நிர்வாகிகள் டிஜிபி மற்றும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்திருந்தனர். ஆனால், கரூர் உயிரிழப்பு சம்பவம், அதனை சார்ந்த உயர்நீதிமன்ற வழக்கு போன்றவற்றைக் காரணம் காட்டி ரோடு ஷோக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 9-ஆம் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கான அனுமதி மனு, சீனியர் எஸ்பி கலைவாணனிடம் த.வெ.க.வினரால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சூழலில், புதுச்சேரி போலீசார் மாநாட்டிற்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளனர்
புதுச்சேரி போலீசின் கட்டுப்பாடுகள்
மாநாட்டில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
த.வெ.க. வழங்கும் QR கோடுடன் கூடிய நுழைவுச்சீட்டு கொண்டவர்களுக்கே அனுமதி.
நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் மாநாட்டு இடத்திற்குள் வர கண்டிப்பாகத் தடை.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் – இவர்களுக்கு பங்கேற்பு அனுமதி இல்லை.
புதுச்சேரியில் வசிப்பவர்களுக்கே மட்டும் அனுமதி; தமிழகத்தில் இருந்து வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்; அவர்கள் மாநாட்டுக்கு வராமல் இருக்க வேண்டுமென்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.
வாகன நிறுத்தம்:
பாண்டி மெரினா பார்க்கிங்
மைதான பின்புறம்
பழைய துறைமுக பகுதி
இந்த இடங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதி; சாலையோரம் அல்லது மாநாட்டு வளாகத்திற்குள் வாகனங்கள் நிறுத்தம் தடை.
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பின்வரும் வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்:
குடிநீர்
கழிப்பறை
ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி
தீயணைப்பு வாகனங்கள்
அவசரநிலை வெளியேறும் வழிகள்
புதுச்சேரி போலீசின் இந்த அறிவிப்பு காரணமாக, மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து வர விரும்பிய த.வெ.க. ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

