2026-ம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (CM Vijay) முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு
விழா நடைபெறும் கோட்டை வளாகத்தைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் இல்லம் அமைந்துள்ள நீலாங்கரையில் இருந்து கோட்டை வரையிலான வழித்தடங்கள் மற்றும் தலைமைச் செயலகப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் சோதனை
சென்னை விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. CISF மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரின் எல்லைப் பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

