அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விதிகளைத் திருத்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொதுவாகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அரசு ஊழியர்களை, அவர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்து, ஓய்வுப் பலன்களைக் நிறுத்தி வைக்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் 2021 இல் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், விதி 110-இன் கீழ் வெளியான அறிவிப்பின்படி, சஸ்பெண்ட் நடவடிக்கை விதிகளைத் திருத்தி, தமிழக அரசு தற்போது அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய விவரங்கள்:
+ குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் இனிமேல் உரியத் தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் விசாரணை முடிந்த பின்னர்தான் பணப் பலன்களைப் பெற முடியும்.
+ துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
+ குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதா, மிகப்பெரிய தண்டனைக்குரியதா, பணிநீக்கம் செய்வதற்கு உரியதா என்றெல்லாம் ஆய்வு செய்வது அவசியம்.
+ முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தால், ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதைத் தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்பே நடவடிக்கைகளை முடிக்க வேண்டும்.
+ அவ்வாறு முடியாத பட்சத்தில், நிர்வாக ரீதியான தாமதத்தைக் கருத்தில் கொண்டு, அந்த அரசு ஊழியரை ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும்.
+ ஓய்வுபெறும் சூழலில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அப்போது பணியிடை நீக்கம் செய்யலாம்.
+ முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை, மூன்று மாதங்களுக்கு முன்பு முடிக்காமல் தாமதப்படுத்தினால் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
+ சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
+ இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

