உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், வைகையாற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திடீரென மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை உயரதிகாரிகளைக் காணொளி வாயிலாகக் கூட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொளியில் அதிகாரிகளிடம் பேசிய உதயநிதி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றார்.
முகாம்களுக்கு மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வருகிறார்கள். இதுவரை தமிழ்நாடு முழுவதும், 11.50 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர சுமார் 17 இலட்சம் மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை சார்பாக பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மனுக்களையெல்லாம் வெறும் காகிதங்களாகப் பார்க்கக் கூடாது; மக்களுடைய, தனிமனிதனுடைய வாழ்க்கையாக அதிகாரிகள் பார்க்க வேண்டும் -உதயநிதி
மேலும் இந்த மனுக்களை, ஏதோ குறைதீர்ப்பு நாள் மனுக்களாகவோ, சாதாரண மனுக்களாகவோ கருதாமல், அவற்றின் மீது உடனடித் தீர்வுகளை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று உதயநிதி கேட்டுக்கொண்டார். தீர்க்க இயலாத மனுக்கள் மீது உரிய பதிலை அதிகாரிகள் மனுதாரர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அப்போது அவருடன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பிற தொடர்புடையத் துறை செயலாளர்களும் இருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் தலைமையில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்” குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #உங்களுடன்_ஸ்டாலின் |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/kMFo1LxpAa
— TN DIPR (@TNDIPRNEWS) August 29, 2025
இதனிடையே, ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்பட்டவை என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி கூறியிருக்கிறார். ஆற்றில் கிடந்தவை, மனுக்களின் நகல்கள் என்றும் அதுபற்றி உரிய விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

