Reaction : நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், விவசாய சங்கங்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. அதேவேளையில், சில அரசியல் கட்சிகள் ஊக்கத்தொகை உயர்வு போதுமானதாக இல்லை என விமர்சித்துள்ளன.
இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, சன்ன ரகத்துக்கு ரூ.289, சாதாரண ரகத்துக்கு ரூ.159 எனவும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 எனவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால், இந்த உயர்வு போதுமானதல்ல.கரும்புக்கு கூடுதலாக ரூ.1,117 ஊக்கத்தொகை வழங்க அரசு முன்வர வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ஆதார விலையுடன் சேர்த்து நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். மேலும், விவசாயிகளின் பிற கோரிக்கைகளையும் பரிசீலித்து, அவற்றை படிப்படியாக அரசு நிறைவேற்றும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் நேரத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500-ம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற அரசு தயங்குவது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என அவர் விமர்சித்துள்ளார்.
விவசாய சங்கங்கள் வரவேற்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, கரும்பு விவசாய சங்கத் தலைவர் வலியுறுத்தியதை ஏற்று, டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது எனத் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், நெல் மற்றும் கரும்புக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கையாக இதைக் கருதுவதாகவும், தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியையும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரும்பு விவசாயிகள் சங்கம் நன்றி
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் கூறுகையில், ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு ரூ.3,290 மட்டுமே நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு ரூ.709.50 ஊக்கத்தொகை சேர்த்து மொத்தம் ரூ.4,000 வழங்க அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
இதற்காக தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்த அவர், தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறக்கவும், பழமையான ஆலைகளைப் புதுப்பிக்கவும் அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

