ஆப்பிளை நறுக்கி சிறிது நேரம் வைத்திருந்தால், அதன் நிறம் மெதுவாக மாறி பழுப்பு நிறமாகிவிடும். இதனால் ஆப்பிள் கெட்டுவிட்டதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், இது பெரும்பாலும் காற்றுடன் ஏற்படும் இயற்கையான வேதியியல் மாற்றத்தால் நிகழ்கிறது.
நறுக்கிய ஆப்பிளை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சில எளிய வீட்டு முறைகளைப் பின்பற்றலாம்.
எலுமிச்சைச் சாறு உதவும்
நறுக்கிய ஆப்பிள் துண்டுகளில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை தெளித்து, மெதுவாக கலந்து வைக்கலாம். எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை ஆப்பிளின் நிறம் விரைவாக மாறுவதை தாமதப்படுத்த உதவும்.
உப்பு கலந்த தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கவும். நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை இதில் சில நிமிடங்கள் வைத்த பின்னர் தண்ணீரை வடிகட்டி, காற்று புகாத டப்பாவில் சேமிக்கலாம்.
உப்பின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. இல்லையெனில் ஆப்பிளின் சுவை மாறக்கூடும்.
தேன் கலந்த தண்ணீரையும் பயன்படுத்தலாம்
சிறிதளவு தேனை தண்ணீரில் கலந்து, அதில் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சில நிமிடங்கள் வைப்பதும் நிறம் மாறுவதை குறைக்க உதவும் ஒரு வழியாக கூறப்படுகிறது.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்
ஆப்பிள் துண்டுகள் காற்றுடன் அதிக நேரம் தொடர்பில் இருப்பதும் நிறம் மாறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எனவே, நறுக்கிய ஆப்பிளை திறந்த நிலையில் வைப்பதைத் தவிர்த்து, காற்று புகாத உணவுப் பெட்டியில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.
ஆப்பிளை நறுக்கியவுடன் உடனடியாக சாப்பிடுவது சிறந்தது. இருப்பினும், முன்கூட்டியே நறுக்கி வைக்க வேண்டிய சூழலில் மேற்கண்ட எளிய முறைகள் அதன் நிறத்தையும் புத்துணர்ச்சியையும் ஓரளவு பாதுகாக்க உதவும்.

