தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 6 நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று லண்டனில் நடைபெறும் முக்கிய கார் பந்தய நிகழ்வில் பங்கேற்கிறார்.
சில்வர்ஸ்டோனில் கார் பந்தயம்
பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, இரவு 11.45 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது கவனம்
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று விஜய் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலுக்கு செல்லும் விஜய், அங்குள்ள பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு வசதிகள் மற்றும் போட்டிகளை சர்வதேச தரத்தில் நடத்துவதற்கான உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட உள்ளார்.
முதலீடுகளை ஈர்க்கும் திட்டம்
விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாக தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டனில் உள்ள தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ், விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளையும் இந்த பயணத்தின் போது ஆய்வு செய்ய உள்ளார்.

