அகமதாபாத்தில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை சீரிஸ் – 3 போட்டியின் மகளிர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பரபரப்பான இறுதிப்போட்டி
இறுதிப்போட்டியில் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானைச் சேர்ந்த அய்ஜதா செய்டனை எதிர்கொண்டார். இருவரும் சிறப்பாக செயல்பட்டதால் ஆட்டத்தின் முடிவில் 144-144 என்ற புள்ளிகளில் சமநிலை ஏற்பட்டது.
இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க ஷூட்அவுட் நடத்தப்பட்டது. அதில் ஷீத்தல் தேவி 10 புள்ளிகளை பெற்ற நிலையில், அய்ஜதா 9 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் ஷீத்தல் தேவி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள்
இந்தப் போட்டியின் இறுதி நாளில் இந்திய வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டனர். ரீகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் ஹர்விந்தர் சிங் – பாவ்னா ஜோடி தங்கம் வென்றது.
மேலும், காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி – தோமன் குமார் ஜோடி வெண்கலம் வென்றது. காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் சரிதா மற்றும் தோமன் குமார் ஆகியோரும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
ஷீத்தலின் மற்றொரு முக்கிய சாதனை
இந்த வெற்றி ஷீத்தல் தேவியின் உலக பாரா வில்வித்தை சீரிஸில் கிடைத்த முதல் தனிநபர் தங்கப் பதக்கம் ஆகும். உலகின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள ஷீத்தல், சொந்த மண்ணில் இந்த வெற்றியைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்ததாக நடைபெறவுள்ள 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு ஷீத்தல் தேவி தனது சிறப்பான பார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

