சென்னையில் நவீன வசதிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.1,200 கோடி திட்டம்
சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அவை விதி 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தபடி, சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய நிர்வாக வளாகம் உருவாக்கப்பட உள்ளது.
பட்டினப்பாக்கம் தேர்வு
புதிய தலைமைச் செயலகத்துக்காக கோயம்பேடு, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினப்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் பட்டினப்பாக்கம் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பட்டினப்பாக்கத்தில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 21.76 ஏக்கர், சென்னை மாநகராட்சியின் 0.93 ஏக்கர் மற்றும் வருவாய்த் துறையின் 1.73 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.
விரிவான திட்ட அறிக்கை
புதிய வளாகத்தில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிர்வாக வசதிகள் இடம்பெற உள்ளன. திட்டத்துக்கான விரிவான அறிக்கையை பொதுப்பணித் துறை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கட்டிட வடிவமைப்பு நிறுவனம் தேர்வு, திட்ட வரைபடம் மற்றும் கட்டிடத்தின் இறுதி வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த 3 சிறப்புக் குழுக்கள் அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் புதிய தலைமைச் செயலக முயற்சி
தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சி இதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டது. 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்துக்கான திட்டத்தை முன்வைத்தார். பின்னர் 2010-ல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்தக் கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
தற்போது பட்டினப்பாக்கத்தில் புதிய வளாகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த புதிய தலைமைச் செயலகத் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

