Death sentence: நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவருக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இதில் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2022-ல் நடந்த கொடூர சம்பவம்
2022-ம் ஆண்டு, மாணவியை காதலிப்பதாக கூறி பழகிய முருகேசன் என்பவர், அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தனது நண்பர்களான முனீஸ்வரன் மற்றும் சின்னக்குட்டி ஆகியோரையும் அங்கு வரவழைத்து மூவரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஒருவருக்கு மரண தண்டனை
இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், சின்னக்குட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பைத் தொடர்ந்து மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

