2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நவம்பர் 5 பயணத்திற்கான முன்பதிவு
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நவம்பர் 5ஆம் தேதி பயணிக்க விரும்புவோருக்கான முன்பதிவு செப்டம்பர் 6ஆம் (இன்று) தேதி காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய உடனேயே பல ரயில்களில் இருக்கைகள் வேகமாக நிரம்பின.
முடங்கிய IRCTC இணையதளம்
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால், IRCTC இணையதளம் மற்றும் செயலியில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பல பயணிகள் இணையதளத்தில் உள்நுழைந்து டிக்கெட் தேடியபோது, முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சில ரயில்களில் இருக்கைகள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டதால், பல மணி நேரமாக முயற்சி செய்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவு
தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் முன்பதிவு தேதிகளை கவனிக்க வேண்டியது அவசியம்.
| முன்பதிவு தேதி | பயண தேதி |
| செப்டம்பர் 6 | நவம்பர் 5 |
| செப்டம்பர் 7 | நவம்பர் 6 |
| செப்டம்பர் 8 | நவம்பர் 7 |
இதனால் நவம்பர் 6ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதியும், நவம்பர் 7ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 8ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
ரயில் நிலையங்களிலும் கூட்டம்
ஆன்லைன் முன்பதிவில் சிக்கல் ஏற்பட்டதால், பல பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களை நாடினர். சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர்களை மாற்று வழியாக பயன்படுத்தலாம்.
முக்கிய அறிவிப்பு!
வரும் தீபாவளிப் பண்டிகைக்கான தெற்கு ரயில்வேயின் ரயில் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடங்குகிறது! 🗓️🚂
கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுங்கள்… முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை உறுதி செய்யுங்கள்! 🪔✨#SouthernRailway #Diwali2026 #Diwali… pic.twitter.com/zkqq6YrN3T
— Southern Railway (@GMSRailway) September 5, 2026
நவம்பர் 7
திரும்பும் பயணத்திற்கும் முன்பதிவு
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் சென்னைக்கு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் பயணிகளும் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பண்டிகைக் காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கடைசி நேரத்தில் டிக்கெட் தேடுவதைத் தவிர்த்து முன்கூட்டியே பயணத் திட்டத்தை முடிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
தீபாவளி காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

