தமிழகத்தில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை நவம்பர் 1-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவு
சென்னை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது. தமிழ் பெயருக்கு கீழே ஆங்கிலத்தில் பெயரை குறிப்பிட அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
மீறினால் ரூ.2,000 அபராதம்
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மூன்று மாத கால அவகாசம் கோரிக்கை
வழக்கு நீதிபதி கே. சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நவம்பர் 1 கடைசி அவகாசம்
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ம் தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

