மத்திய அரசின் ‘ஸ்வச்ச் வாயு சர்வேக்ஷன் 2026’ காற்றுத் தூய்மை ஆய்வில், (Swachh Vayu Sarvekshan 2026,) 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 48 நகரங்களில் சென்னை 35-வது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னிலையில் திருச்சி
தமிழ்நாட்டில் சென்னையைவிட திருச்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. 183 புள்ளிகளுடன் திருச்சி தேசிய அளவில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், மதுரை 132.1 புள்ளிகளுடன் 39-வது இடத்தில் உள்ளது.
முன்னணி நகரங்கள்
இந்த தரவரிசையில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ 198 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தூர் 197 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜபல்பூர் 195 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
சென்னை 35-வது இடத்தில் இருக்கும் நிலையில், ஹைதராபாத் 19-வது இடத்திலும், டெல்லி 21-வது இடத்திலும், மும்பை 28-வது இடத்திலும், பெங்களூரு 32-வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா 38-வது இடத்தைப் பிடித்துள்ளது.
எதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு?
இந்த ஆய்வு காற்றின் தரக் குறியீட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படவில்லை. சாலைத் தூசி கட்டுப்பாடு, திடக்கழிவு மேலாண்மை, வாகனப் புகை, தொழிற்சாலை மாசு, கட்டுமானக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாசு ஏற்படும் காரணிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் பொதுமக்களிடையே காற்று மாசு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சிறந்த வார்டுகள்
இந்த ஆய்வில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மூன்று வார்டுகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தின் 110-வது வார்டு முதல் பிரிவிலும், திருச்சி தில்லைநகரின் 22-வது வார்டு இரண்டாவது பிரிவிலும், திருவேற்காடு நகராட்சியின் 11-வது வார்டு மூன்றாவது பிரிவிலும் தேர்வாகியுள்ளன.
இவற்றுக்கு முறையே ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

