Toxic Movie Promotion Controversy: நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
Toxic Movie பட புரமோஷன் விழாவில் நயன்தாரா
இந்த விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்றது தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வரும் நயன்தாரா, யாஷின் அழைப்பை ஏற்று டாக்ஸிக் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் பங்கேற்பதில்லை. நடிகர் அஜித் போலவே நயன்தாராவும் திரைப்பட புரமோஷன்களில் இருந்து விலகியே இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சென்டிமென்ட் காரணமாக பங்கேற்பதில்லை
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், நயன்தாரா தனது படங்களின் வெற்றி, தோல்வியைப் பற்றிய சென்டிமென்ட் காரணமாக புரமோஷன் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதாகவும் திரையுலகில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. அதேசமயம், தனது சொந்த தொழில் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் தவறாமல் பங்கேற்று வருகிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான நேசிப்பாயா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், பொதுவாக திரைப்பட புரமோஷன்களில் தான் கலந்து கொள்வதில்லை என்றும், இயக்குநர் விஷ்ணுவர்தன் தனது நண்பர் என்பதால் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது வழக்கமான நடைமுறையைத் தாண்டி டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா பங்கேற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் தனது மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டார். நடிகைகள் கியாரா அத்வானி, ஹீமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, தான் பொதுவாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்றும், இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும் கூறினார்.
யாஷ் தன்னை நேரடியாக அழைத்தார்
மேலும், டாக்ஸிக் திரைப்படம் தனக்கு மிகவும் முக்கியமானது என்றும், அதற்கான காரணங்களில் யாஷும் ஒருவர் என்றும் குறிப்பிட்டார். யாஷ் தன்னை நேரடியாக அழைத்ததால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு அந்த அழைப்பு மட்டுமே போதுமான காரணமாக இருந்ததாகவும் நயன்தாரா தெரிவித்தார்.
நயன்தாராவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “அப்படியென்றால் தமிழ் சினிமாவில் நயன்தாராவை பட புரமோஷன்களுக்கு மற்ற முன்னணி நடிகர்கள் அழைப்பதில்லையா?” என்ற கேள்வியையும் சில ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதனால் டாக்ஸிக் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியைத் தாண்டி, நயன்தாராவின் பட புரமோஷன் கொள்கை குறித்த விவாதமும் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

