பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் சக்திவாய்ந்த எல் நினோ’ நிகழ்வு உலக நாடுகளின் வானிலை மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல் நினோவால் (EL Nino ) அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஆசிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த S&P Global Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக வானிலையை மாற்றும் சூப்பர் எல் நினோ (EL Nino)
பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோவின்போது கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும். தற்போது உருவாகி வரும் எல் நினோ (EL Nino ) மிகவும் வலிமையானதாக இருக்கும் பட்சத்தில், உலகின் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் அமேசான் பகுதிகளில் கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். அதேவேளையில், அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
இந்தியாவில் பருவமழைக்கு பாதிப்பு?
எல் நினோவின் தாக்கம் இந்தியாவின் விவசாயத்திலும் பருவமழையிலும் எதிரொலிக்கக்கூடும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே கோடைக்காலத்தில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை பலவீனமடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடமேற்கு இந்தியாவில் வறட்சி ஏற்பட்டு, விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.
உணவு விலை உயருமா?
பயிர் உற்பத்தி குறைந்தால் உணவு தானியங்களின் விலை அதிகரித்து, பணவீக்கம் மேலும் உயரக்கூடும். இது பொதுமக்களின் அன்றாட செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என S&P Global Ratings எச்சரித்துள்ளது.
இந்த சூழலில் நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவித்தல் மற்றும் விவசாயிகளுடன் மாவட்ட அளவில் ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Shaking Well | குஜராத்தில் அசைந்தாடும் கிணறு காரணம் என்ன?
கடும் வெப்பத்தில் கவனம் அவசியம்
வெப்பநிலையுடன் காற்றின் ஈரப்பதமும் அதிகரிக்கும் போது, உடலால் வியர்வை மூலம் வெப்பத்தை வெளியேற்றுவது கடினமாகலாம். எனவே கடும் வெப்ப நேரங்களில் போதுமான தண்ணீர் அருந்துதல், நேரடி வெயிலைத் தவிர்த்தல் மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்திருத்தல் அவசியம்.

