கர்நாடக மாநில நிர்வாக விவகாரங்களில் தமிழகமோ, வேறு எந்த மாநிலமோ தலையிடக் கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி பிரச்சினைகள்
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே. சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு (Shot Dead) சம்பவம் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஒரு மாநிலத்தின் நிர்வாக விவகாரங்களில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது. ஓ. பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இந்த அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனித்தனி பிரச்சினைகள் உள்ளன. நமது மாநிலத்தை எவ்வாறு காப்பது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.
அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும்
தொடர்ந்து பேசிய டி.கே. சிவகுமார், “அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும்; நாம் நமது பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. அதேபோல், நமது மாநிலத்தின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மானை வேட்டையாடியதாகக் கூறி அந்தோணிசாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சொந்த ஊர்களில் அடக்கம்
கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்களும் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் நேற்று அவர்களது சொந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன.
சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்
இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்றும், சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்களின் இந்தக் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் “ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


vanakkam