சிறிய அளவிலான விமர்சனங்களுக்குக் கூட வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் போக்கு தொடர்வது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் விமர்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளை முதல்வர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சியின் அதே பாதையா?”
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “தமிழக முதல்வர் கவனத்துக்கு, திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் அதிகார போதையில் மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் தற்போதைய அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமூக வலைத்தளங்களில் ஆளும் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனது குடும்பத்தை அவதூறாக விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த ‘வி தி லீடர்ஸ்’ தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனக் குரல்களை அடக்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய கருத்துகளை கண்காணிப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, அதே நேரத்தில் ஆட்சி மற்றும் ஆளும் கட்சியை விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது போன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வரை மகிழ்விக்கும் நோக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை முதல்வர் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வர்
முதல்வர் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு, கைது என்ற நடவடிக்கைகள் தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றும், இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

