புதுச்சேரியில் நாளை, விஜய் பங்கேற்க உள்ள தவெக மாநாடு நடைபெற உள்ளது. உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்தும் வலியுறுத்தி உள்ளார்.
ஒருவேளை தமிழ்நாட்டில் இருந்து யாரேனும் வந்தால் அவர்கள் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் காவல்துறையின் எச்சரிக்கை.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதிலும், க்யூஆர் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு இருப்பவர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் – இவர்களுக்கு பங்கேற்பு அனுமதி இல்லை.
கூட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்கள் மேல் ஏறி நிற்பது, கம்பங்களில், கூடாரங்களில், சுவர்களில் ஏறி நின்று பார்ப்பது போன்ற அநாகரீகச் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு வருவோர் தங்களது வாகனங்களை, பாண்டி மெரினா பார்க்கிங், மைதான பின்புறம், பழைய துறைமுக பகுதி ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். சாலையோரம் அல்லது மாநாட்டு வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரிக்கு நாளை சாலை மார்க்கமாக விஜய் செல்லும்போது அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்து யாரும் வரக் கூடாது என்று அக்கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

