தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகத்தில் பரந்தாமன்
மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
தாராபுரத்தில் சுகன்யா
தாராபுரம் (தனி) தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவை திமுக வேட்பாளராக அறிவித்துள்ளது. இதன்மூலம் இரு தொகுதிகளிலும் திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக முதற்கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஆளும் தவெக மற்றும் அதிமுக தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முக்கிய அரசியல் கட்சிகள் களமிறங்குவதால், இரு தொகுதிகளிலும் தேர்தல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தல் நிலவரம்
மதுராந்தகம் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
