Kozhukattai | விநாயகர் வழிபாடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை மற்றும் மோதகம். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
ஆனால், ஏன் கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பிரசாதமாக கருதப்படுகிறது என்பதற்கு ஒரு ஆன்மிகக் கதை கூறப்படுகிறது.
ஞானபாலியின் கதை
புராணக் கதைகளின்படி, ஞானபாலி என்ற அரசன் விநாயகரின் தீவிர பக்தராக இருந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டதால் மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பின்னர் ராஜகுருவின் ஆலோசனையின்படி யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால் யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் அவர் அதனை பாதியில் நிறுத்தினார். இதனால் அஷ்ட திக் பாலர்களின் சாபத்திற்கு ஆளான ஞானபாலி, கொடிய உருவம் பெற்று உயிரினங்களை துன்புறுத்தியதாக ஆன்மிகக் கதை தெரிவிக்கிறது.
விநாயகரின் கருணை
ஞானபாலி தொடர்ந்து விநாயகரை வழிபட்டு வந்ததால், அவரது பக்தியை கருத்தில் கொண்ட விநாயகர் அவருக்கு அருள் செய்ய முடிவு செய்தார். இருவருக்கும் இடையே நடந்த போரின் முடிவில், எதிரில் வந்தவர் விநாயகரே என்பதை ஞானபாலி உணர்ந்து அவரிடம் சரணடைந்தார்.
தன்னுடைய பசியை தீர்த்து, தன்னை தன்னுடன் வைத்துக்கொள்ளுமாறு அவர் விநாயகரிடம் வேண்டியதாக கதை கூறுகிறது. அவரது வேண்டுகோளை ஏற்ற விநாயகர், அவரை கொழுக்கட்டை வடிவமாக மாற்றி தன்னுள் ஏற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.
கொழுக்கட்டையின் தத்துவம்
இந்த நிகழ்வுக்குப் பிறகு ஞானபாலியின் பசியை தீர்க்க கொழுக்கட்டை படைக்கப்பட்டதாகவும், அதன் நினைவாகவே விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யும் வழக்கம் உருவானதாகவும் ஆன்மிக மரபில் கூறப்படுகிறது.
கொழுக்கட்டையின் ஆன்மிகப் பொருள் இதைவிட ஆழமானதாகவும் விளக்கப்படுகிறது. அதன் இனிப்பான பூரணத்தை ஆன்மாவாகவும், அதனைச் சுற்றியுள்ள மாவை உடலாகவும் எடுத்துக்கொண்டு, மனிதன் தனது உடல் மற்றும் ஆன்மாவை இறைவனிடம் அர்ப்பணிப்பதை கொழுக்கட்டை குறிக்கிறது என்ற தத்துவ விளக்கம் கூறப்படுகிறது.
இவ்வாறு, விநாயகர் சதுர்த்தியில் படைக்கப்படும் கொழுக்கட்டை வெறும் உணவாக மட்டுமின்றி, பக்தி, சரணாகதி மற்றும் இறைவனிடம் தன்னை அர்ப்பணித்தல் ஆகியவற்றின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

